Thursday, July 08, 2010

நான்முகன் திருவந்தாதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமழிசைபிரான் அருளிச்செய்த


நான்முகன் திருவந்தாதி


சீராமப்பிள்ளை அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

திருமழிசைப்பிரானடி வாழ்த்து


நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து



நான்முகன் திருவந்தாதி


2382:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1

2383:
தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெருமை, ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவ தாழியான் பால் 2

2384:
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு? 3

2385:
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4

2386:
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி 5

2387:
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று. 6

2388:
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை 7

2389:
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை 8

2390:
குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு 9

2391:
ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து 10

2392:
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை
வழாவண்கை கூப்பி மதித்து 11

2393:
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12

2394:
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன் 13

2395:
நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன், பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர் 14

2396:
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை 15

2397:
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால் 16

2398:
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17

2399:
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம் 18

2400:
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19

2401:
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும், - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை 20

2402:
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள், - இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு ? 21

2403:
அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின், - குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து 22

2404:
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23

2405:
நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும்
இகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை 24

2406:
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று 25

2407:
மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்குமா று 26

2408:
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது 27

2409:
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை
தானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28

2410:
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன். 29

2411:
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல். 30

2412:
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை 31

2413:
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி 32

2414:
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு. 33

2415:
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்

2416:
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை? 35

2417:
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான். 36

2418:
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு. 37

2419:
அகைப்பில் மனிசரை யாறு சமயம்
புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,
அப்போ தொழியும் அழைப்பு. 38

2420:
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39

2421:
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
_ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40

2422:
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர, பேணி
வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று. 41

2423:
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42

2424:
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43

2425:
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து. 44

2426:
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45

2427:
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று. 46

2428:
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.

2429:
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை. 48

2430:
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49

2431:
கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50

2432:
எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை? 51

2433:
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர். 52

2434:
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு. 53

2435:
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை. 54

2436:
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
நிரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்? 55

2437:
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு. 56

2438:
ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்? 57

2439:
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு. 58

2440:
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59

2441:
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் 60

2442:
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு. 61

2443:
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து. 62

2444:
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது. 63

2445:
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது. 64

2446:
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை, - யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்? 65

2447:
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம். 66

2448:
வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,- நலமாக
நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம். 67

2449:
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68

2450:
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான். 69

2451:
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய். 70

2452:
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71

2453:
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்? 72

2454:
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த
பண்டைத்தா னத்தின் பதி. 73

2455:
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா. 74

2456:
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு. 75

2457:
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட்ட தற்பு. 76

2458:
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு. 77

2459:
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்
காரலங்க லானமையா லாய்ந்து. 78

2460:
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து. 79

2461:
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு, படுநரகம்
வீடின வாசற் கதவு. 80

2462:
கதவு மனமென்றும் காணலா மென்றும்,
குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து. 81

2463:
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே?, - அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து. 82

2464:
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர். 83

2465:
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில். 84

2466:
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன். 85

2467:
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை. 86

2468:
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர். 87

2469:
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது. 88

2470:
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89

2471:
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர் 90

2472:
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று 91

2473:
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92

2474:
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93

2475:
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று. 94

2476:
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடநாடு காண இனி. (2) 95

2477:
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96


திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.

No comments: